இந்த பெருமைக்குரிய உலகில் நாடோடித்தனமாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த மனிதகுலத்திற்கு ஒரு நிலையானவாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள பெரிதும் துணை நின்றது விவசாயம் எனும் உழவுத்தொழில். அத்தகைய நிலைபெற்ற வாழ்க்கைக்கு பிறகுதான் மனிதகுலம் பல்வேறு நாகரிக வளர்ச்சிகளை கண்டது. அதன் பின்பும் மனிதனால் செய்யப்பட்ட பல்வேறு தொழில்களில் முதன்மையானதாகவும் மனிதகுலத்திற்குஅத்தியாவசியமானதாகவும் விளங்கியது உழவுத்தொழில்தான். இதன்பெருமையை உணர்ந்துதான் வள்ளுவப் பெருந்தகை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்று உழவுத்தொழிலுக்கு சிறப்பு செய்ததோடு தான் இயற்றிய திருக்குறளில் ”உழவு (திருக்குறள் அதிகாரம்: 104)” எனும் தனி அதிகாரம் அமைத்து விவசாயம் பற்றிய பெருமைகளையும் முக்கியதுவத்தையும் சொல்லிச்சென்றிருக்கிறார்.
நாகரிகம் மேம்பட்டு மனித குலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளை கண்ட காலகட்டத்திலும் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பழங்காலந்தொட்டே வணக்கத்திற்குறிய தொழிலாக விவசாயம் இருந்து வந்துள்ளது என்பதை பல்வேறு வரலாற்று சான்றுகளும் இலக்கிய பாடல்களும் எடுத்து காட்டுகின்றன. மனித வாழ்க்கையில் உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகளுள் முதலாவதாக இருப்பது உணவு எனவே அந்த உணவு உற்பத்திக்கு மூலதனமாக விளங்கும் வேளாண் தொழிலை போற்றி வணங்குவது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதில் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை.